மனம்

மனமும் அமைதியும்

ஒரு தாளை எடுங்கள், உங்கள் அமைதி கெட்டதற்குரிய காரணங்களை வரிசைப்படுத்துங்கள். அமைதியாக இருந்த நாட்களை எண்ணிப் பாருங்கள். அதற்குப் பிறகு எப்போதிலிருந்து, எப்படி அமைதி கெட்டது என்பதற்குரிய காரணங்களை கண்டறியுங்கள். வரிசைப்படுத்துங்கள்.
1. யாரேனும் உங்களைப்பற்றித் தவறாகப் பேசியதால் நீங்கள் அமைதியை இழந்திருக்கலாம்.
2. நீங்கள் வாங்கிய கடனைத்திரும்பக் கேட்டபோது உங்கள் அமைதிக்குப் பாதிப்பு நேர்ந்திருக்கலாம்.
3. நடக்க வேண்டிய காரியங்கள் சரியாக, சீராக நடக்கவில்லையானாலும் நீங்கள் நினைத்தக் காரியம் நினைத்தபடி நடக்கவில்லையானாலும் அமைதி இழக்கும் நிலை ஏற்படும்.
4.. நீங்கள் அன்பு செலுத்தியவர்கள் உங்களைப் புறக்கணித்த போது அமைதியை இழந்திருக்கலாம்.
5. ஒரு பொருளை வாங்க எண்ணி முடியாதபோது, ஒரு பதவியை அடைய முயற்சித்துத் தோல்வி அடைந்தபோது அமைதியை இழந்திருக்கலாம்.
6. உங்கள் குழந்தைகள் தவறான பழக்கத்தற்கு அடிமையாகி விட்டமை அறிந்தபோது அமைதியை இழந்திருக்கலாம்.
7. அநியாயமாகச் செயல்கள் நடைபெறுகின்றபோதும், அதனால் தனிப்பட்ட முறையில் நீங்கள் பாதிக்கப்பட்ட போதும் அமைதியை இழந்து இருக்கலாம்.
8. உடல் நலக்குறைவு, தீராத நோய், உடல் ஊனம் போன்றவைகளும் மன அமைதியைக் குலைத்து விடும்.
9. காதல் தோல்வி – இது போன்ற உள்ளார்ந்த செயல்பாடுகளால் அமைதியை இழக்க நேரிடலாம்.
10. நாட்டின் நிலையை நினைத்து சிலர் அமைதியை இழப்பதும் உண்டு.
இத்தகைய இவை போன்ற பல காரணங்களால் நம் மன அமைதிக்கு பாதிப்பு நேர்வதுண்டு எதனால் என்று கண்டறிந்து அதை நீக்க முயற்சிக்க வேண்டும். அதுவே மன அமைதியை மீண்டும் பெறுவதற்குரிய சிறந்த வழியாகும்.
அமைதியை வளர்த்துக் கொள்ள சில விதி முறைகள்.
1. நல்ல பழக்க வழக்கங்கள்.
முறையான பழக்க வழக்கங்கள் அமைதியை நல்கும். நமது முறையான பழக்க, வழக்கங்களே – அதிகாலையில் எழுதல், குளித்துவிட்டுப் பணிகளுக்குச் செல்லல் போன்ற சிறு சிறு செயல்கள்தாம் நம் குழந்தைகளின் நல்ல பழக்கத்திற்கு நிரந்தர பாடமாக அமைகின்றன.
தநதை தாம் புகை பிடிப்பதை அங்கீகரித்துக் கொள்கிறார். தன் மகன் புகை பிடிக்கும்போது மன அமைதியை இழந்து விடுகின்றார். காரணம் மகனைத் திருத்தும் தகுதியை அவர் இழந்துவிடுகிறார்.
2. நேர்மையாக நடந்துகொள்ளுதல்
முடிவதை முடியும் என்றும் முடியாத்தை மறுத்துவிடுதலும் அப்போதைக்குச் சிரமாக இருந்தாலும் நாளடைவில் மன அமைதி கிட்டும். இல்லாவிடின் மன அமைதி கெட்டுவிடும். முறை தவறி, தாட்சண்யம் கருதிச் செய்வதால் பலர் துன்பத்திற்கு ஆளாகி மன அமைதியை இழந்து விடுகின்றனர்.
நல்ல நண்பர்கள் சேர்க்கை
நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பெரும் பேறாகும். நல்ல நண்பர்கள் இருக்கும்போது தீய சிந்தனைக்கோ, தீய பேச்சுக்களுக்கோ இடமில்லை. தீமையில்லாதபோது அமைதி நிலைபெறுகிறது. நல்ல நூல்களும் மன அமைதிக்கு வழி வகுக்கிறது.
மன்னிக்கும் மனப்பான்மை
பிறர் செய்யும் சில குறைகளை – பொறுத்துக் கொள்ளவும் – சில குறைகளை மன்னிக்கவும் – சிலவற்றை முழுமையாக மறந்து விடவும் கற்றுக் கொள்வதால் பலரது அமைதி பாதுகாக்கப்படுகிறது.
தியானம்
தியானப் பயிற்சியால் மனம் கட்டுப்படுத்தப்பட்டு அமைதி காக்கப்படுகிறது; தியானப் பயிற்சி – முறையாக – நீண்ட நாள் – தொடர்ந்து செய்தால் அன்றிப் பயன் நல்காது. ஈடுபாடு இல்லாத தியானத்தாலும் பயனில்லை.
இறையருள்
சில வகையான துன்பங்கள் – விரைவில் தீர்க்கமுடியாத – ஊனங்கள் அவமானங்கள் – மன அமைதியைக் கெடுத்து விடுவதுண்டு. அத்தகைய சூழலில் இறையருளை எண்ணி நமது கடமையைச் செவ்வனே ஆற்றுவதே மன அமைதிக்குச் சிறந்த வழியாகும். அறிவுக்கும் அப்பாற்பட்டு – காரணம் காணவே முடியாத சில துன்பங்களுக்கு இறையருள்தான் வழிகாட்ட வேண்டும். அந்த நம்பிகையோடு செயல்படுவதுதான் மன அமைதிக்கு சிறந்த வழியாகும்.
ஈடு செய்தல்
நாம் அறிந்தோ அறியாமலோ சில தவறுகளைச் செய்து இருப்போம். அதற்குப் பிராயச்சித்தமாக – அதற்கு ஈடுசெய்யும் வகையில் – இசல நன்மைகளைச் செய்யும்போது நமக்கு மன அமைதி ஏற்படுகின்றது.
இது ஒரு வகை. மற்றொரு வகை நாம் செய்யாத ஒரு தவறுக்காக தண்டனை ஏற்க வேண்டிவரும். அப்போது, நமக்கு இப்போது ஏற்பட்டுள்ள துன்பம் ஏற்கனவே செய்த தவறுக்கு உரியது என்று சமநிலைப்படுத்திக்கொண்டால் அமைதியை இழக்க நேரிடாது.
மன அமைதியும் மன உறுதியும்
மன அமைதியும் மன உறுதியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனதை அமைதியாக வைத்திருப்பவர்கள் எந்தக் காரியத்திலும் மன உறுதியுடன் இருப்பார்கள். அதேபோல் மன உறுதியுடன் இருப்பர்கள் ஒருபோதும் மன அமைதியை இழக்கமாட்டார்கள்.
மாறாக ஒன்றை இழந்தால் மற்றொன்றையும் இழந்துவிட நேரிடும், ஆகவே ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக விளங்கும் இரண்டையும் ஒரு சேரப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
இந்த இரண்டு தன்மைகளையும் பாதுகாக்கவும் வளர்த்துக்கொள்ளவும் எவ்வித முதலீடு தேவை இல்லை. பொருட் செலவும் செய்ய வேண்டுவதில்லை. உணர்ச்சி பூர்வமாக இருப்பதை விடுத்து அறிவு பூர்வமாகச் சிந்தித்து நம்மை நாமே சரிசெய்துகொள்வதுதான் நாம் செய்ய வேண்டிய செயலாகும்.
சிலரைப் பாருங்கள். எப்போதும் சிரித்த முகத்துடனேயே செயலாற்றுவார்கள். அவர்களுக்கு நம்மைக் காட்டிலும் அதிகமாப் பொருளாதாரப் பிரச்னைகள், தீர்க்கமுடியாத குடும்ப பிரச்சினைகள். பல்வேறு வெளி விவகாரங்கள் என்று பல இருக்கும்.
அவற்றை அவர்கள் அணுகும் முறை – அவற்றைக் கையாளும்முறை – அவற்றைச் சீரணிக்கும் முறை – அவற்றை ஏற்றுக்கொள்ளும் முறை இவற்றை உற்றுக் கவனித்தால் – உண்மை விளங்கும். நாம் எந்த அளவுக்கு – இந்த அணுகு முறைகளில் குறைபாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பது விளங்கும்.